போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள்
போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள்
போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள் ! போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள் !
உயிர்களைப் பொறுத்தவரை போக வேண்டியவர் களிடமிருந்து அவை போகாமலும், போகக் கூடாதவர்களிடம் இருந்து அவை போய் விடுவதாகவும் வேடிக்கையாகக் கூறுவார்கள்.
உலகப் போர்க்களங்கள் எத்தனையோ சோகங்களைக் கண்டிருக்கின்றன. ஆனால் இதுபோல ஒரு சோகத்தையும், இதுபோல ஓர் நெஞ்சுரத்தையும் அது கண்டிருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
தீயினில் எரியாத தீபங்கள் என்று தமிழீழ மக்களால் போற்றப் படுபவர்கள் பன்னிரு வேங்கைகள். தீருவில் வெளியினில் தீயான இந்த வேங்கைகளில் ஒருவர்தான் தளபதி குமரப்பா !
அன்று இலங்கையில் இந்திய இராணுவம் கால் பதித்திருந்த நேரம். அப்பொழுதுதான் தளபதி குமரப்பாவிற்கு வல்வையில் உள்ள அவருடைய இல்லத்தில் திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை இந்திய இராணுவ அதிகாரிகளும் கூட வந்து வாழ்த்திச் சென்றதாகக் கூறுகிறார்கள்.
நாட்டின் பணிகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் குமரப்பா ! திருமணமானபோது அவருக்கு திடீரென ஓர் பணி வருகிறது. தானே செய்ய வேண்டுமென நினைத்து கடலில் பயணிக்கிறார். நடுக்கடலில் வைத்து இவருடன் புலேந்திரன் உட்பட பதினைந்துபேர் கைதாகிறார்கள்.
அது போர் நடைபெற்ற நேரமல்ல. இந்தோ - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களை உடனடியாக விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால் அமைதியை நிலைநாட்ட வந்த இந்திய இராணுவம் அதை கடுகளவும் உணரவில்லை. இராணுவத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று போருக்கு செல்லும் இராணுவம் மற்றயது அமைதிப் பணிக்கு செல்லும் இராணுவம். இன்றய உலகின் இராணுவங்களை அவதானிப்போர் இதை எளிதாக உணரலாம். இந்தியா அனுப்பியிருந்தது போருக்கு சென்ற இராணுவமா ? அல்லது அமைதிக்கு சென்ற இராணுவமா ? என்பதை அதை அனுப்ப முன் ஆய்வு செய்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலாம்.
குமரப்பா, புலேந்திரன் கைதான செய்தி தெரிந்ததும் சிறிலங்கா அரசு
ஒப்பந்தத்தை மறந்துவிட்டது. அவர்களை தந்திரமான முறையில் கொழும்புக்கு கொண்டு வரும்படி கட்டாயப் படுத்தியது. சிறிலங்கா அரசின் இதயத்தில் விசுவாசமாக இந்திய - இலங்கை ஒப்பந்தம் இல்லை என்பதைக் கண்டுபிடிக்க இந்த ஒரு இடமே போதுமானது. எனினும் இந்திய அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை. குமரப்பா, புலேந்திரனை வைத்து தான் தீட்டிய ஒப்பந்தத்தின் பேரம் பேசல் நாடகத்தை நடத்தலாமென எண்ணுகிறது.
இரு அரசுகளுக்கும் குமரப்பா, புலேந்திரன் உட்பட கைதாகி இருக்கும் வேங்கைகளின் பெறுமதி புரியும். குமரப்பா போட்டுச் சென்ற மணமாலை கூட வாடியிருக்காது என்பது அவருடைய திருமணத்திற்கு வந்த இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் தெரியும்.
ஒரு மணமாலையை வைத்து மாபெரும் அரசியல் நாடகத்தையே ஆடத் திட்டமிடுகிறார்கள் -
இந்தியச் சிந்தனை மரபில் மணமாலை பெற்றிருக்கும் உளவியல் பெறுமதி அனைவரும் அறிந்தது. இந்த உணர்ச்சிகரமான புள்ளியில் அரசியல் முடிவுகள் வந்து நின்றால் சாதாரண மக்கள் என்ன நினைப்பார்கள் ? எல்லாவற்றையும் பின்னர் பார்ப்போம் முதலில் இவர்களது விடுதலையைப் பார்ப்போம் என்ற கோணத்திலேயே எண்ண முயல்வார்கள்.
இதனால் விடுதலைப் புலிகள் மீது மக்கள் அழுத்தம் கொடுப்பார்கள். இதை வைத்து விடுதலைப் புலிகளைப் படியிறங்க வைக்க வேண்டும். எந்த மகானும் ஆடிப் போய்விடக் கூடிய உணர்ச்சிகரமான புள்ளியில் வைத்து தமது நாடகத்தை ஆரம்பித்தன இந்திய - சிறிலங்கா அரசுகள்.
இதுவரை வளர்த்தெடுத்த போராட்டத்தை அதே உறுதியுடன் கொண்டு செல்வதா? அல்லது அரை - குறைத் தீர்வுத் திட்டங்களால் சீரழிந்து சின்னாபின்னமான மற்றய நாடுகளின் போராட்டங்கள் போல நமது போராட்டத்தையும் தடம் மாற்றி இறக்குவதா ? முடிவெடுக்க வேண்டிய திகிலாடும் கணங்கள்.
மாலை ஒன்றுதான் ! ஆனால் அது நான்கு பெயர்களில் ஆடியது !
மணமாலையா ?
திருமண வீட்டில் விழப்போகும் பிணமாலையா ?
இந்திய இலங்கை சதித் திட்டத்திற்கு கிடைக்கப் போகும் வெற்றி மாலையா ?
போராட்டத்திற்கு விழப்போகும் புகழ் மாலையா ?
நான்கு விதமான மாலைகளையும் ஏந்தியபடி வரலாறு ரங்கராட்டினமாக தலைக்கு மேல் சுழன்றது !
அத்தருணம்தான் போராட்டத்திற்கு புகழ் மாலை என்ற இடத்தில் மாலை அறுந்து பன்னிரு வேங்கைகளின் கழுத்தில் விழுந்தது. குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளும் சயனைட் வில்லைகளைக் கடித்து வீரமரணம் அடைந்தார்கள்.
தமக்கே வெற்றி மாலை விழுமென காத்திருந்தவர்கள் அது கிடைக்காமல் போனதும் இறந்தவர்களின் உடலங்களோடு போர் புரிந்தனர். அவற்றை வெட்டிக் காயப் படுத்தி தாங்கள் யார் என்பதை உலகுக்கு எடுத்துரைத்தனர்.
நாளை தமிழீழம் மலர இருக்கிறது ! அதற்கு இன்று உயிரைக் கொடுக்க வேண்டும் என்றாலே சந்தோஷமாக முன்வரும் மனோ பலம் பெற்றவர்கள் நம் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்களிடம் இருந்துதான் இப்படியான வீரர்கள் தோன்ற முடியும் என்பதை அவர்கள் உணர்த்தினர்.
நேற்று மண முடித்த மனைவியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் இன்று உயிரைப் போக்க உலகில் ஒரு இதயம் இருக்கிறதா ? வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்க்கிறேன். தளபதி குமரப்பாவின் இடத்தை உலகில் எவரும் தொட்டதாக இல்லை. அப்படியே புலேந்திரனும் புதிதாக மணம் முடித்தவரே.
இளம் வயதிலேயே குமரப்பாவை பார்த்திருக்கிறேன். அவரோடு பழகியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவரிடம் நான் அவதானித்த பண்பு மற்றவர் துயரப்படக் கூடாது. மற்றவருக்காக தான் துயரப்படலாம் என்ற உயர்ந்த உள்ளமே அவருடையது.
தன்னை நம்பி சூடிய மாலையுடன் கனவுகளைக் கண்களில் சுமந்து வீட்டில் காத்திருக்கும் அன்பு மனைவி ! தான் இல்லாவிட்டால் அவள் அடையப் போகும் துயர், பெற்றோரின் ஆதங்கம் எல்லாவற்றையும் அவர் எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. ஆனாலும் அத்தருணம் அவர்கள்; தங்கள் தேசத்தையே உயர்வாக மதித்தார்கள்;. ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்டு நின்று தமது இன்னுயிர்களையே தந்தார்கள் இது வரலாறு.
இருந்தாலும் ஒரு கேள்வி ! எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பரம்பொருள் இருப்பது உண்மை என்றால் அந்தப் பரம்பொருள் ஏன் இந்த இடத்தில் மவுனமாக நின்றது ? இதுதான் தீருவிலில் எரிந்த தீயைப் பார்த்தபோது பலரிடம் தோன்றிய கேள்வி.
கடந்த மாவீரர் நாளில் தேசியத் தலைவர் நிகழ்த்திய உரையில் அதற்கான பதில் இருக்கிறது. மாவீரர்களுக்காக எரிக்கப்படும் தீச்சுடரின் ஊடாக அந்த வீரர்கள் எனக்கு வழி காட்டிச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டார். பரம்பொருள் அல்லது இயற்கைக்கு தெரியாமல் எதுவும் நடக்கவில்லை என்பதற்கு இந்த உரையே நல்ல ஆதாரம். அனைத்தையும் தெரிந்த பரம் பொருளின் ஆசியுடன்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. அதற்கு வலுவான ஆதாரம் தருவனவே இந்த உயிர்கள்.
திலீபனை பன்னிரெண்டு நாட்கள் நீரின்றி, உணவின்றி எரித்து தியாகி ஆக்கியது பரம் பொருள். பதினைந்து வேங்கைகள் சைனைட் வில்லையைக் கடித்தாலும் பன்னிரண்டு உயிர்களை மட்டும் எண்ணி எடுத்து திலீபன் பட்டினி கிடந்த பன்னிரண்டு நாட்களுக்கும் தலா ஒன்றுப்படி பன்னிரண்டு உயிர்ப் பூக்களைப் பறித்தெடுத்து, அந்தத் தியாகத்திற்கு அர்ச்சனை செய்தது இயற்கை.
ஆம் !
போகக் கூடாத நேரத்தில் போன உயிர்கள் ! வரக்கூடாத நேரத்தில் நாட்டுக்குள் வந்த ஆக்கிரமிப்பாளரை போகச் செய்யும் ! தீருவில் தீயில் எடுத்த சபதம் இந்தியாவைப் போகச் செய்தது. இனி சிறீலங்காவையும் போகடித்து தமிழீழத்தை மலரச் செய்யும் இதற்கு அந்த உயிர்கள் துணை நிற்கும்.
தலைவர் தீக்குள்ளால் கண்ட காட்சி இதுதான் !
வியாழன் 08.06.2007 காலை 10.00 மணிக்கு இணைய வானில் தவழும் !

